Indian Railways News => Topic started by eabhi200k on Dec 23, 2012 - 09:00:26 AM


Title - தஞ்சை ரெயில் நிலையத்தில் இறுதிக்கட்டத்தில் 1, 2–வது பிளாட்பார பணிகள் அகற்றப்பட்ட நடைபாலம் இருவழிபாதை
Posted by : eabhi200k on Dec 23, 2012 - 09:00:26 AM

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில் நிலையத்தில் 1 மற்றும் 2–வது பிளாட்பார பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அகற்றப்பட்ட நடைபாலம் இருவழிபாதையாக மீண்டும் தயாராகி வருகிறது.

1, 2–வது பிளாட்பாரம்

தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் நிலையம் ஆகும். இங்கு மொத்தம் 5 பிளாட்பாரங்கள் உள்ளன. இந்த ரெயில் நிலையத்திற்கு முகப்பு வாயிலும், மேரீஸ்கார்னர் பகுதியில் ஒரு வாயிலும் என 2 வழிகள் உள்ளன. தஞ்சையில் இருந்தும் தஞ்சை வழியாகவும் என தற்போது 30–க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 25–க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சைக்கு வரும் ரெயில்களும், தஞ்சையில் இருந்து செல்லும் ரெயில்களும் இந்த 5 பிளாட்பாரங்கள் வழியாக சென்று வந்தன. இந்த நிலையில் திடீரென 1, 2–வது பிளாட்பாரம் மூடப்பட்டன. தற்போது 3, 4, 5 ஆகிய பிளாட்பாரங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

இதில் பெரும்பாலான ரெயில்கள் 3, 4–வது பிளாட்பாரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் வயதானவர்கள், உடல்நிலை முடியாதவர்கள் 1, 2–வது பிளாட்பாரத்தை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டன. இதையடுத்து 1 மற்றும் 2–வது பிளாட்பாரத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.

பணிகள் தொடக்கம்

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து 1,2–வது பிளாட்பாரங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டன. ரெயில் நிலைய கட்டிடப்பணி, சுரங்கப்பாதை அமைக்கும் பணி, 1, 2–வதுபிளாட்பாரம் அமைக்கும் பணிக்கு என ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 1, 2–வது பிளாட்பார பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருகின்றன. தற்போது தண்டவாளம் அமைக்கும் பகுதியின் அடித்தளம் கான்கிரீட் போடப்பட்டு பிளாட்பாரம் அமைக்கப்பட்டு உள்ளன.

தஞ்சை ரெயில் நிலையத்தில் மொத்தம் 5 பிளாட்பாரங்கள் உள்ளன. இந்த பிளாட்பாரங்களுக்கு செல்வதற்காக நடைபாதை பாலம் அமைக்கப்பட்டு இருந்தன. ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் இருந்து பின் பகுதி வரை செல்லும் வகையிலும் இந்த பாலத்தில் இருந்து 5 பிளாட் பாரங்களுக்கும் செல்லும் வகையிலும் வழிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. தற்போது 1, 2–வது பிளாட்பார பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதை தொடர்ந்து 1, 2–வது பிளாட்பாரத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த நடைபாதை பாலம் அகற்றப்பட்டன.

தற்காலிக நடைபாதை

தற்போது ரெயில் நிலையத்தில் உள்ள 1, மற்றும் 2–வது பிளாட்பார பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. பிளாட்பாரத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் இருந்து 1, 2–வது பிளாட்பாரங்களை கடந்து மற்ற பிளாட்பாரங்களுக்கு செல்வதற்காக தற்காலிகமாக போடப்பட்ட நடைபாதையும் அகற்றப்பட்டு விட்டது.

ஏற்கனவே இருந்த நடைபாதையில் இருந்து 20 அடி தொலைவில் பிளாட்பாரம் போடப்பட்ட இடத்தில் தற்போது மண் கொட்டப்பட்டு தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது பயணிகள் அந்த வழியாக ரெயில் நிலையத்திற்கு சென்று வருகின்றனர். ஏற்கனவே நடைபாதை இருந்த இடம் அகற்றப்பட்டு அதில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. மேலும் 1–வது, 2–வது பிளாட்பாரத்தில் நிழற்கூரைகள் அமைப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நடைபாலம் மீண்டும் தயார்

1, 2–வது பிளாட்பாரத்தில் மேல் இருந்த நடைபாலம் பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது அந்த பாலம் மீண்டும் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக ரெயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகள் ஏறும் வகையில் வழி இருந்தது. தற்போது அந்த நடைபாலம் முகப்பு பகுதியிலேயே இருவழிப்பாதையாகவும் அமைக்கப்படுகிறது.

மேலும் தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகள் ஒவ்வெரு பிளாட்பாரங்களுக்கு எளிதில் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதையும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 1, 2–வது பிளாட்பாரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. இதில் 1, 2–வது பிளாட்பாரம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் மற்ற பிளாட்பார பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கும். தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் 1, 2–வது பிளாட்பாரம் இன்னும் 1 மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.